இந்த இணையதளத்தை www.sammanthuraiweb.tkபார்ப்பதில் சிரமம் ஏற்பட்டால் பின்வரும் முகவரியில் பார்வை இடுங்கள். www.sammanthuraiweb.blogspot.com

11/16/2012

சம்மாந்துறை வரலாறு



(இங்கு சிலரை அவ்லியா என குறிப்பிடப்பட்டுள்ளது ஒருவரை அவ்லியா எனக்குறிப்பிடும் அதிகாரம் எம்மிடம் இல்லை  யாவற்றையும் அறிந்த அல்லாவிடம் மட்டுமே, இந்த அதிகாரம் உண்டு என்பேதே எமது நிலைப்பாடாகும்.)

சம்மாந்துறை தொடர்பான புகை படங்களை அனுப்புங்கள் அதை இந்த வரலாறு பகுதியில் இடம்பெற செய்ய தயாராக உள்ளோம் உதாரணம் பள்ளிவாசல்கள்,வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடம்.

அனுப்பும் படங்கள் அணைத்தும் சம்மாந்துறை சார்ந்த படமாக இருக்க வேண்டும்

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி  
infostrweb@gmail.com


சம்மாந்துறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தின் தென்கிழக்கு என அடையாளப் படுத்தப்பட்ட பிரதேசம். இது முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியாகும். சம்மாந்துறை இப்பிரதேசத்தின் முக்கிய நகரமாகக் கணிக்கப்படுகின்றது. புவியியல் ரீதியிலும் கேந்திர முக்கியத்துவமான இடத்திலும் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

வரலாறு  கண்டி இராச்சியத்தின் கிழக்கின் முக்கிய துறைமுகமாகவும் சம்மாந்துறை விளங்கிய வரலாற்றைக் காண்கின்றோம். சம்மாந்துறையிலிருந்து ஐந்து பாதைகள் மலைநாட்டை நோக்கிச் சென்றுள்ளதாக “மட்டக்களப்புத் தமிழகம்” எனும் நூல் குறிப்பிடுகின்றது. இஸ்லாத்துக்கு முந்திய காலங்களிலும் பாவா ஆதம் மலையைத் தரிசிப்பதற்கும், வெளிநாட்டார் சம்மாந்துறைத் துறைமுகத்தில் கப்பல்களைக் கட்டிவிட்டுச் சென்றுள்ள தகவலை “காத்தான்குடி வரலாறு” குறிப்பிடுவதையும் அறிகின்றோம். டிஒய்லி – Dioyly என்ற பிரித்தானியத் தூதுவர் “போர்த்துக்கீசரின் காலத்தில் சம்மாந்துறை கண்டி இராச்சியத்தின் பிரதான துறைமுகமாக அமைந்திருந்தது” என தனது தினக் குறிப்பில் பதிந்துள்ளார். 1676இல் ஒல்லாந்து அதிபதியாகக் கடமைபுரிந்த ஜேக்கப் பெர்னாந்து “மட்டக்களப்பு என்ற சம்மாந்துறையையும் கண்டியையும் ஐந்து காட்டுப்பாதைகள் இணைத்தன” என்று கூறிய ஆதாரமும் கிடைக்கின்றன. ஒல்லாந்து தளபதியான ஸ்பில்பேர்க்கன் என்பவர் இந்தியாவில் “மட்டக்களப்பு ஆறு எங்கே உள்ளது” என விசாரித்தறிந்து சம்மாந்துறையை வந்தடைந்த குறிப்பேடுகளும் உண்டு. சம்மாந்துறை முஸ்லிம்களின் உதவியோடு கண்டி அரசன் விமலதர்மசூரியனை சந்திக்கச் சென்றுள்ளான். இவ்வாறு வரலாற்று ஆதாரங்கள் சம்மாந்துறைத் துறைமுகத்தையும், வர்த்தக நடவடிக்கைகளையும், கண்டி அரசனுக்குள்ள தொடர்புகளையும் விளக்குவதை அறியலாம். சம்மாந்துறை கடல் சார்ந்த துறைமுகமா? என்ற கேள்வி எழலாம். மட்டக்களப்பு வாவியூடாக அதன் தென்பகுதியின் கரைதான் சம்மாந்துறை. பரந்து விரிந்த இவ்வாவியின் தென்பகுதியைத்தான் மட்டக்களப்பு என பெயர்குறித்து வழங்கப்பட்டு வந்துள்ளது. “புளியந்தீவு” என்ற இடத்தில் 1628இல் போர்த்துக்கீசர் தமது பாதுகாப்புக்காக கோட்டையைக் கட்டிய பின்தான் புளியந்தீவு மட்டக்களப்பாக மாற்றமடைந்தது. இன்றும்கூட சம்மாந்துறையில் மட்டக்களப்புத் தரவை – 01,02 என இரண்டு கிராம அலுவலர் பிரிவுகள் இருப்பதை அறியலாம். இந்தியாவில் இருந்து முக்குகர் வருகை , சோழநாட்டு இளவரசி சீர்பாததேவியின் வருகை, சிந்துபாத்தின் வருகை, அராபியர் , பாரசீகர் வருகை என்பன மட்டக்களப்பு வாவியூடாக சம்மாந்துறை துறைமுகத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகின்றன. வங்காள விரிகுடாவிலிருந்து இலங்கையினுள் பிரவேசிக்கும் பிரயாணப் பாதையாகச் சம்மாந்துறை இருந்து வந்துள்ள வரலாற்று ஆதாரங்கள் இன்னும் பலபல எடுத்துக் காட்டலாம். விரிவஞ்சி விடுகின்றேன்.

பெயர்க்காரணம்  சம்மான் - துறை என இரு பதங்களாக வகுக்கும்போது துறை என்பதற்கான காரண காரியங்களைக் கண்டோம். இந்திய முஸ்லிம் வர்த்தகர்களில் ஒரு பகுதியினர் ‘சம்மான் காரர்’ என அழைக்கப்பட்டனர். கொழும்பு ‘சம்மான் கோட்டுப் பள்ளி’ இந்திய முஸ்லிம்களின் அடையாளச் சின்னம். அத்துடன் சாமான்கள் வந்திறங்கிய ஏற்றுமதி செய்யப்பட்ட துறைமுகமாக இருந்தபடியாலும் சாமான்துறை, சம்மாந்துறையாக பெயர் பெற்றிருக்கலாம். ‘சம்பன்’ என்பது மலாய மொழியில் வர்த்தக நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் வள்ளங்களைக் குறிக்கும் சொல்லாகும். இந்திய முஸ்லிம் வியாபாரிகளும், மலாயர்களும் வர்த்தக நோக்கில் வங்காள விரிகுடாவிலிருந்து மட்டக்களப்பு வாவியூடாக, அதன் தென்பகுதித் துறையில் வந்திறங்கிய படியால் சம்மாந்துறை என பெயராயிற்று எனலாம். மிகப் பழைய காலந்தொட்டு சம்மாந்துறை நெல் உற்பத்தியில் சிறந்து விளங்கியமைக்கான ஆதாரங்கள் அனேகமுள்ளன. சிந்துபாத்தின் கூற்றில் வயலுக்கு நீர்ப்பாய்ச்சிக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்ததாகவும், அவர் அரபியில் தன்னுடன் பேசியதையும் குறிப்பிட்டுள்ளார். எனவே ‘சம்பா’ என்ற அரிசியை ஏற்றுமதி செய்த துறையாகவும் விளங்கியதால் சம்மாந்துறையாகவும் பெயர்பெற்றிருக்கலாம். இங்குள்ள பழைய உறுதி ஆவணங்களில் ‘சம்பாந்துறை’ எனப் பொறிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சம்மாந்துறையின் முக்கியத்துவத்தினால் இங்கு அமையப்பெற்றிருந்த பாரிய சந்தை (ஆலையடி என்றழைக்கப்பட்ட பழைய மார்க்கட்) யின் அவசியத்தினால் வெளிநாட்டு வர்த்தகர்கள், இறைநல்லடியார்கள் வந்துகொண்டிருந்ததினால் அராபிய முஸ்லிம்களின் வருகையும் தவிர்க்க முடியவில்லை. அதனடிப்படையில் சிறுசிறு அளவில் முஸ்லிம்களின் குடியிருப்புக்களும் இங்கு அமையப்பெறலாயின. துறைமுகமும், சந்தை வசதிகளும் அமையப்பெற்றிருந்த வகையால், உள்ளுர் வாசிகளின் உதவிகளோடு ‘தாவளம்’ என்றழைக்கப்படும் மாடுகளின் மூலம் பொருட்களை கொண்டு செல்வதற்காக சம்மாந்துறையில் தாமதித்துச் செல்லவேண்டியிருந்ததால், வணக்கஸ்தலத்தின் அவசியம் உணரப்பட்டதால் முதன்முதலாக 12ம் நூற்றாண்டளவில் ‘முகையதீன் பள்ளி’ என்ற முதல் பள்ளிவாசல் சம்மாந்துறையில் அமையப்பெறலாயிற்று. முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி என்ற மார்க்கப் பெரியார் அக்காலத்தில் பிரபல்யமான மார்க்க அறிஞராக விளங்கியமையால், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் ‘முகையதீன்’ என்ற பெயரை இப்பள்ளிக்கு வைத்திருக்கலாம். இதைத் தொடர்ந்து 15ஆம் நூற்றாண்டளவில் சம்மாந்துறை துறைமுகத்தில் வந்திறங்கிய சரக்குக் கப்பலில் இருந்து இரண்டு இறைநல்லடியார்களும், அவர்களுடன் ஆறு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை ஒன்றும் இன்றைய பெரியபள்ளியடியில் இருந்த மரத்தடியில் இளைப்பாறினர். இதன் அண்மையிலிருந்த சந்தையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த மக்கள் இவ்நல்லடியார்களின் வருகையைக் கேள்விப்பட்டு அவர்களைத் தரிசிப்பதற்காக கூட்டம் கூட்டமாக ஒன்று கூடினர். அவர்களில் ஒருவர் மத்திய கிழக்கைச் சேர்ந்த சாயலையுடையவராகவும், மற்றவர் தென்னிந்திய சாயலையுடையவராகவும் காணப்பட்டனர். இவ்விருவரையும் அக்குழந்தையையும் அப்போதைய சின்னப்பள்ளியில் தங்குமாறு மக்கள் வேண்டியும் மறுத்த படியால், பெரிய பள்ளி வளவிலேயே அவர்களுக்கான இருப்பிடம் அமைத்துக் கொடுத்தனர். அன்றைய சம்மாந்துறை முஸ்லிம்கள் கோசப்பா, கோஸ்முகையதீன் அப்பா, உம்முகுல்தூம் என இவர்களை அழைத்தனர். இவர்களது மார்க்கப்பிரசங்கம், பேணுதலான நடவடிக்கைகள் ஆகியவற்றால் அப்பிரதேசத்தில் இஸ்லாத்தின் இருப்பும், வளர்ச்சியும் அதிகரிக்கலாயின. முஸ்லிம்கள் மாத்திரமன்றி தமிழ் மக்களும் இந்நல்லடியார்களுக்கு மதிப்பும் மரியாதையும் வழங்கி வரலாயினர். இவ்விறை நல்லடியார்களின் மறைவின் பின்னர் மக்கள் இவர்களை அவுலியாக்கள் என மதிப்பும் மரியாதையும் வழங்கி வந்ததுடன் அவ்விடத்தில் பள்ளிவாசல் ஒன்றையும் அமைத்தனர். இதனால் முதலாவது பள்ளிவாசல் “முகையதீன் (சின்னப்பள்ளி) பள்ளிவாசலுடன் இரண்டாவது பள்ளியாக அவுலியாவின் பெயரில் “கோசப்பா பள்ளி”யும் உதயமாயிற்று. அவர்களுடன் வந்திருந்த பெண் குழந்தை உம்முகுல்தூம் அப்பகுதி முஸ்லிம் குடும்பம் ஒன்றிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்ந்து வாழ்க்கைப்பட்டு குடும்பமாக சீவித்து வரலாயினார். உம்முகுல்தூம் என்ற இப்பெண்னின் வம்சத்தவர்களே இன்று சம்மாந்துறையில் “கோசப்பா குடி”யினர் என்றழைக்கப்படும் வம்சத்தவர். 1800ஆம் ஆண்டளவில் கோசப்பா பள்ளி என்ற சிறு குடிசை ஓரளவுக்கு கல்லாலும் , சிப்ப்p ஓட்டினாலும் விஸ்தரிக்கப்படுகின்றது. இதன் பிற்பாடு ஜும்ஆத் தினங்கள் முகையதீன் பள்ளியிலும், கோசப்பா பள்ளியிலுமாக மாறி மாறி நடைபெற்று வரலாயிற்று. இவ்விரு பள்ளிகள் தவிர சம்மாந்துறையின் சுற்றாடலில் இறை நல்லடியார்களின் தங்குமிடங்களாக இருந்த இடங்களும் பள்ளிகளாக உருப்பெற்றென. கலந்தரப்பா பள்ளி மல்கம்பிட்டியிலும், குருந்தையடியப்பா குடாவட்டையிலும், காட்டவுலியா சேனைவட்டையிலும், வீரயடியப்பா கொண்டவட்டுவானிலும் கண்கத்தியப்பா சின்னப்பள்ளி ஒழுங்கையிலும் அமையப்பெறலாயின. சம்மாந்துறையில் முஸ்லீம்களின் குடியிருப்புக்கள் வளர்ந்து வருவதின் அவசியத்தின் காரணமாக 19ஆம் நூற்றாண்டின் இறுதியளவில் தக்கியாப் பள்ளி தோற்றம்பெற்றது. அன்றைய காலக் கட்டத்தின் சிறிய பள்ளியாக இருந்த படியால் “தைக்கியா” எனப் பெயர் பெற்றது. மத்ரஸா நடத்தப்பட்டு வந்த இடத்திலும் பள்ளியொன்று தேவைப்பட்டதால் அவ்விடத்தில் “மத்ரஸாப் பள்ளி” தோற்றம்பெற்றது. 1947ஆம் ஆண்டளவில் இப் பள்ளி அமையப்பெற்றதெனலாம். ஊரில் புதிதாக தோன்றிய பள்ளியாகையால் காலகெதியில் மத்ரஸாப்பள்ளி என்ற பெயர் மாற்றமடைந்து “புதுப்பள்ளி” என வழங்கலாயிற்று. இன்று “மஸ்ஜிதுல் உம்மா” என பெயர் வழங்கப்பட்டு வருகின்றது. சம்மாந்துறையின் அன்றைய மரைக்கார் சபை உறுப்பினராக இருந்த “கண்ணாடி மரைக்கார்” எனும் பெரியார் இவ்வளவை அன்பளிப்புச் செய்திருந்தார் . சம்மாந்துறையின் குடியிருப்புக்கள் தெற்கு நோக்கி “ஜே புளக்” குடியேற்ற பிரதேசங்களிலும், மேற்கு, கிழக்கு நோக்கியும் விரிவடையத்தொடங்கின. இதன் நிமித்தம் செட்டிட வட்டையில் மஸ்ஜிதுல் ஸலாம், சம்புமடுவில் மஸ்ஜிதுல் அழ்பர், கைகாட்டியடியில் மஸ்ஜிதுல் ஜாரியா, விளினையடியில் மஸ்ஜிதுல் ஜலாலியா, வீரமுனைப் பகுதியில் மஸ்ஜிதுல் கைர், மட்டக்களப்புத் தரவையில் மஸ்ஜிதுல் நகர் என பள்ளிகளின் தொகைகள் விரிவடைந்து செல்லலாயின. இவ்வாறு பள்ளிகளின் தொகை 1980களில் 25 பள்ளிகளாக இருந்த படியால் இவற்றின் நிருவாகத்தை ஒரேயமைப்பில் கொண்டுவரும் முயற்சியில் ஊர் பெரியார்களும், அன்றைய நம்பிக்கையாளர் சபையினரும் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக “மஜ்லிஸ் அஷ்ஷ{ரா” அமைப்பு 1985ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ் அமைப்பில் சகல பள்ளிவாசல்களின் பிரதிநிதிகளும், குடிமரைக்கார்மார்களும், சமய, சமூக, கலாசார, கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். இவ்வமைப்பு சம்மாந்துறைப் பிரதேசத்தில் உள்ள 44 பள்ளிவாசல்களையும் ஒரு நம்பி;க்கையாளர் சபையூடாக நிருவாகித்து வருகின்றது. மஜ்லிஸ் அஷ்ஷ{ரா ஊராளுமன்றமாகவும், நம்பிக்கையாளர் சபை ஒரு மந்திரிசபை போன்றும,; ஒவ்வொரு ஜமாஅத் நிறுவாகங்களும் மாநில அமைப்பாகவும் செயற்பட்டுவருவதை அவதானிக்கலாம். மஜ்லிஸ் அஷ்ஷ{ராவின் அமீர் (தலைவர்) சம்மாந்துறையில் அதியுயர் சபையின் அமீர் ஆகையால், இவர் சம்மாந்துறையின் சமூகத் தலைவராகவும் கணிக்கப்படுகின்றார். மஜ்லிஸ் அஷ்ஷ{ரா அமைப்பு நம்பிக்கையாளர் சபையைத் தெரிதல், வரவு செலவுத் திட்டங்களை அங்கீகரித்தல், கணக்காய்வு அறிக்கைகளைப் பரிசீலித்தல், சமய நடவடிக்கைகளை முன்னெடுத்துச்செல்லல், சமூகங்களுக்கிடையில் இன நல்லுறவை ஏற்படுத்தல், மிக முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளல் என்பனவாகும்.

 சம்மாந்துறை சின்னப்பள்ளி முன் தோற்றம்
சம்மாந்துறை  ஹிஜ்ராபள்ளி முன் தோற்றம்
 சம்மாந்துறை தொழில் பயிற்ச்சி நிலையம்
 சம்மாந்துறைநெல்லுப்பிடி சாந்தி நுழைவாயில்
 சம்மாந்துறை  நாகர்பள்ளி  முன் தோற்றம்
சம்மாந்துறை  ஜலாலியாபள்ளி  முன் தோற்றம்
சம்மாந்துறை  பெரிய பள்ளி பழைய முன் தோற்றம்
சம்மாந்துறையில் உங்கள் பிரதேச படங்களையும் விரைவாக அனுப்புங்கள் 
முகவரி 
infostrweb@gmail.com


0 comments:

Post a Comment

புதிதாக இணைக்கப்பட்ட நமது மண்ணின் அரசியல் பகுதியில் முழுமையான செய்திகளும் பதிவேற்றப்படவில்லை***** முழுமையாக செய்தி வகைகளை பதிவேற்றிய பின் வாசகர்களுக்கு அறியத்தருகிறோம் இன்ஷா அல்லா